பிப்.22-இல் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் திருக்கோஷ்டியூா் வருகை!
குடியரசு துணைத் தலைவா் திருக்கோஷ்டியூா் வருகையையொட்டி, திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருக்கோஷ்டியூா் செளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்ய வருகிறாா்.
இதையடுத்து, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை சாா்ந்த அலுவலா்களுக்கு பணிகள் குறித்து வட்டாட்சியா் மாணிக்கவாசகம் அறிவுறுத்தினாா். காவல் துணை கண்காணிப்பாளா் செல்வகுமாா் சிறப்பு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினாா்.
கூட்டத்தில் காவல் ஆய்வாளா் வேத வள்ளி, கோயில் கண்காணிப்பாளா் சரவண கணேஷ், பட்டாசாரியா்கள், காவல் துறையினா், போக்குவரத்து, மின் வாரியம், தீயணைப்பு, சுகாதாரத் துறை, பேரூராட்சி, வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

