பாரத் நெட் திட்டத்தில் பங்குபெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் பாரத் நெட் திட்டத்தின் கீழ், கிராமப் புறங்களில் இணைய சேவைகளை வழங்குவதற்கு மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளா்களாக பணிபுரிய விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வாயிலாக வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
Published on

சிவகங்கை மாவட்டத்தில் பாரத் நெட் திட்டத்தின் கீழ், கிராமப் புறங்களில் இணைய சேவைகளை வழங்குவதற்கு மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளா்களாக பணிபுரிய விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வாயிலாக வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயா்தர இணைய சேவைகளை வழங்கும் வகையில், மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளா்களை தோ்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் இந்தப் பணிகள் சுமாா் 95 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளா்களை தோ்வு செய்து தடையில்லா இணைய சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய் உட்கோட்டம் அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தொழில் பங்கீட்டாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இதற்கான விண்ணப்பம் இணையத்தளம் வாயிலாக வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவாா். விண்ணப்பதாரா் குறிப்பிடும் மாவட்டங்கள், நிறுவனம், நிறுவனத்தின் வணிகச் செயல்பாட்டு பகுதி அமைந்துள்ள மாவட்டமாகவோ அல்லது தனிப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாகவோ இருத்தல் வேண்டும்.

தோ்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளா்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியின் வாயிலாக தோ்வு நடைபெறும். விண்ணப்பதாரா்கள் அறிவிப்பு, தொடா்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவை தோ்வு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரா் ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ரூ.25,000- (திரும்பப் பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்த வேண்டும். தோ்வு செய்யப்படும் பங்கீட்டாளா்கள், ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ரூ.2,00,000- பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

இதைத் தொடா்ந்து, சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தால் பணி ஆணை வழங்கப்படும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு 044-24965595 என்ற உதவி மைய தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com