உத்தமபாளையம் பேருந்து நிலையத்துக்குள் புறநகர் பேருந்துகள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம் வழியாக கேரள மாநிலத்துக்கும், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் சென்று வருகின்றன. இப்பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லும் வகையில் உத்தமபாளையம் பேரூராட்சி சார்பில் காந்திஜி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
ஆனால், உத்தமபாளையத்தை சுற்றியுள்ள ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அம்மாபட்டி என கிராமங்களுக்கு செல்லும் நகரப் பேருந்துகளை தவிர தேனி, மதுரை, திண்டுக்கல் செல்லும் அனைத்து புறநகர் பேருந்துகளும், பேருந்து நிலையத்திற்குள் வராமல் புறக்கணிக்கின்றன. இப்பேருந்துகள் பேருந்துநிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் பயணிகள் சாலையை கடக்கும் போது விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அரசு புறநகர் பேருந்துகள் உத்தமபாளையம் பேருந்து நிலையத்திற்குள் சென்றுவர போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும் பேருந்து நிலையத்தை சுற்றி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும்.
அத்துடன், போக்குவரத்து விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் ஆம்னி பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்கள் மீதும் போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.