போடியில் வெள்ளிக்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
போடி முதல்வர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராஜாத்தி. இவர்களது மகன் விஜயகுமார் (26). முருகன் இறந்துவிட்ட நிலையில் ராஜாத்தியும், விஜயகுமாரும் வசித்து வந்தனர். இதனிடையே விஜயகுமார் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தாராம். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ராஜாத்தி, சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது விஜயகுமார் மட்டும் வீட்டில் இருந்தார். வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்காததால் அருகில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது விஜயகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜலிங்கம் மற்றும் போலீஸார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: போடி குலாளர்பாளையம் சுள்ளக்கரை 3 ஆவது தெருவில் வசிப்பவர் கோவிந்தன் (54). இவரது இரண்டாவது மனைவி அங்காள ஈஸ்வரி (50). இவர்கள் சமையல் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அங்காள ஈஸ்வரி மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாராம். வெள்ளிக்கிழமை காலை அங்காள ஈஸ்வரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து அங்காள ஈஸ்வரியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் பலத்த தீக்காயமடைந்ததால் உயிரிழந்தார். இதுகுறித்து போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.