தேனி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக் கடைகளில் வரும் ஆக.1-ஆம் தேதி முதல் அரசு மானியம் வழங்கக் கூடிய உர வகைகள், பாய்ன்ட் ஆப் சேல் இயந்திரம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்ணை இணை இயக்குநர் மூர்த்தி கூறியதாவது: அரசு மானியத்துடன் விற்கப்படும் உரங்கள் விவசாயம் அல்லாத இதர பயன்பாட்டுக்கு விற்கப்படுவதை தடுக்கவும், விவசாயிகளுக்கு நேரடியாக சென்றடைவதையும், நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் உறுதி செய்யவும், உரம் விற்பனை மற்றும் இருப்பு விவரத்தை அன்றாடம் தெரிந்து கொள்ளவும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் மற்றும் தனியார் உரக் கடைகளில் "பாய்ன்ட் ஆப் சேல்' இயந்திரம் மூலம் உரம் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, உரக் கடைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் பெயர் மற்றும் ஆதார் அடையாள எண்ணை அந்த இயந்திரத்தில் பதிவு செய்து, உரம் விற்பனை செய்யப்படும். உரம் விற்பனை ரசீதில் அரசு நிர்ணயித்த விலை மற்றும் அரசு சார்பில் உரத்திற்கு வழங்கப்படும் மானியத்தின் மதிப்பு ஆகியவை அச்சிடப்பட்டிக்கும்.
மாவட்டத்தில் உள்ள 75 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 186 தனியார் உரக் கடைகளுக்கு இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் மூலம் பாய்ன்ட் ஆப் சேல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் ஆக.1-ஆம் தேதி முதல் அரசு மானிய விலையில் விற்பனை செய்யக் கூடிய உர வகைகள், பாய்ன்ட் ஆப் சேல் இயந்திரம் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றார்.