மேகமலை வனப்பகுதியில் தனியார் கட்டில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக வனத்துறையினர் 4 பேர் சனிக்கிழமை தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மேகமலை வனஉயிரின கோட்ட காப்பாளர் ஆனந்தகுமார் கூறியதாவது:
மேகமலை வனப்பகுதி, பொம்முராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் வாகனம் வந்து செல்வதற்காக சாலை அமைக்க 177 மரங்களை அந்த எஸ்டேட் நிர்வாகம் வெட்டியுள்ளது. இது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து எஸ்டேட் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மரம் வெட்டப்பட்ட காலங்களில் இப்பகுதியில் பணியாற்றி, தற்போது கம்பம் வனச்சரகத்தில் பணியாற்றும் வனச்சரகர் காஜாமைதீன் மற்றும் வனவர்கள் லோகநாதன், பாபு, காளியப்பன் ஆகியோர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி இக்குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.