தேனி மாவட்டம் சின்னமனூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வாழைகள் காய்ந்து கருகுகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தமபாளையம், சின்னமனூர், குச்சனூர், மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெறுகிறது.
தற்போது பருவமழை பொய்த்ததால் விவசாயத்தின் பரப்பளவு பாதியாக குறைந்து விட்டது. இந்நிலையில் கோடை வெப்பம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் கருகத் தொடங்கியுள்ளன.
குழை தள்ளிய நிலையில் வெப்பத்தால் வாழைக்காய்கள் காய்ந்து உதிர்த்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் வறட்சி நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.