தேனியில் 108 ஆம்புலன்ஸ் சேவையை முறைப்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்து எழுச்சி முன்னணி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்களில் தேவையான முதலுதவி உபகரணங்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கான மருந்துகளை வைத்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் கிடைப்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி நகரத் தலைவர் வெங்கலபாண்டி, ஒன்றியத் தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கோரிக்கை குறித்து ஆட்சியர் ந. வெங்கடாசலத்திடம் மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது இந்து முன்னணியினர் உடலில் கட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.