போடியில் புதன்கிழமை, தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
போடி அருகே எஸ்.தருமத்துப்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன் மகன் ராஜ்குமார். இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த உறங்காபுலி மகன் ராஜாவுக்கும் அருகருகே தோட்டம் உள்ளது. இந்த இரு தோட்டங்களுக்கும் பொதுவான மின் மோட்டார் மூலம் இருவரும் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
இந்நிலையில் தோட்டத்திற்கு யார் முதலில் தண்ணீர் பாய்ச்சுவது என்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் குபேந்திரன் பலத்த காயமடைந்தார். இது குறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் ராஜா, இவரது மனைவி புஷ்பம் ஆகியோர் மீதும், ராஜா அளித்த புகாரின் பேரில் குபேந்திரன், ராஜ்குமார், முருகேஸ்வரி ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.