தேனி கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய பூங்கா வளாகத்தில் சனிக்கிழமை பல்வேறு அமைப்புகள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இந்திய செஞ்சிலுவை சங்கம், தேனி அரிமா சங்கம், அரசு பிற்பட்டோர் நலத்துறை கல்லூரி மாணவர் விடுதி, அரண்மனைப்புதூர் கிராம முன்னேற்ற சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இத்தூய்மைப் பணியை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ரகுபதி தொடக்கி வைத்தார். தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் ராஜாராம் முன்னிலை வகித்தார். பூங்கா வளாகத்தில் இருந்த முள்புதர்கள், பார்தீனியச் செடிகள், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை மாணவர்கள் அப்புறப்படுத்தி தீயிட்டு எரித்து அழித்தனர்.
செஞ்சிலுவை சங்க கௌரவச் செயலர் தியாகராஜன், தேனி நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் பொதுச் செயலர் ராஜ்மோகன், தேனி வழக்குரைஞர் சங்கத் தலைவர் எம்.முத்துராமலிங்கம், மருத்துவர் ஜெயச்சந்திரன், வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் சிதம்பரம், முத்துத்தேவன்பட்டி அரசு பிற்பட்டோர் நலத் துறை கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர் அழகுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.