தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மூதாட்டியை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கண்டமனூர், சத்தியா காலனியில் வசித்து வருபவர் குருவம்மாள் (85). இவர், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருந்தார்.
ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கு வாயில் அருகே அவரை தடுத்து நிறுத்திய போலீஸார், தேனி மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு குரும்மாளிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கண்டமனூரில் தான் வசித்து வந்த வீடு, தன்னிடம் சேமிப்பில் இருந்த பணம் ஆகியவற்றை சிலர் அபகரித்துக் கொண்டதாகவும், தற்போது தான் ஆதரவற்ற நிலையில் விடப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார். இதுகுறித்து கண்டமனூர் காவல் நிலைய போலீஸார் மூலம் விசாரணை நடத்தி உரிய தீர்வு ஏற்படுத்துவதாகக் கூறி அவரை போலீஸார் திரும்ப அனுப்பி வைத்தனர்.