தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 48 மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க அரசு சார்பில் மானிய உதவியை ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், 48 மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க வங்கிக் கடன் மானியமாக மொத்தம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்து 700 வழங்கப்பட்டது. உத்தமபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த 5 பேருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான அரசாணை வழங்கப்பட்டது. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் சார்பில் தையல் பயிற்சி மற்றும் அழகு கலை பயிற்சி பெற்ற 40 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.