தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருவதால் மானாவாரி விவசாயத்துக்கான உழவுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
உத்தமபாளையம், கம்பம், கூடலூர், பெரியகுளம் , ஆண்டிபட்டி என மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து மானாவாரி விவசாயத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து டிராக்டர் மூலம் உழவுப்பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை, உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கம்பம், கூடலூர் மற்றும் ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், காமாட்சிபுரம் வரையிலுள்ள 10 ஆயிரம் ஏக்கருக்கு மேலான மானாவாரி விவசாய நிலத்தில், மொச்சை, தக்காளி, செடி அவரை, நிலக்கடலை விவசாயத்துக்கான விதைப்பு பணிகள் நடைபெறுகின்றன.
தவிர, கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள நெல் விளையும் பகுதியில் கோடை காலத்தில் உளுந்து, பாசிப்பயிறு விவசாயம் நடைபெறும்.
இதன் மூலம் ஆழமாக உழும்போது கீழுள்ள மண் மேல் பகுதிக்கு வருவதால் மண்ணில் உயிர்ச் சத்து அதிகமாகி மண்ணில் நீரோட்டம் ஏற்படும்.
இந்த விவசாயம் மூலம் நிலத்துக்கு இந்த பயிர்கள் தரமான உரமாக மாற்றப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நெல்பயிர் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கும்.
ஆனால் தற்போது போதுமான மழை இல்லாததால் கம்பம் பள்ளத்தாக்கு வயல்களில் இந்த விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பெய்த மழையால் உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் பகுதி நெற்பயிர் விவசாயிகள் நிலங்களை உழவு செய்து உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகளை விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.