சத்துணவுக் கூடங்களுக்கு அரசு சார்பில் சமையல் எரிவாயு உருளை வழங்கக் கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தேனியில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு, மாவட்டத் தலைவர் நிலவழகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ராஜாராம் பாண்டியன், சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலர் பே.பேயத்தேவன், துணைத் தலைவர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சத்துணவுக் கூடங்களுக்கு அரசு சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க வேண்டும், 10-ஆம் வகுப்புக்கு மேல் படித்த சமையல் உதவியாளர்களுக்கு அரசாணைப்படி சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும், உணவூட்டு செலவுத் தொகையை ஒவ்வொரு காலாண்டிற்கும் முன் மானியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
முன்னதாக, தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி பெரியகுளம் சாலையில் சி.ஐ.டி.யு.மாவட்டத் தலைவர் சி.முருகன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.