தேனி மாவட்டம், கம்பம், காமயகவுண்டன்பட்டி பகுதிகளில் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக, நிலவேம்பு குடிநீர் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், கம்பம் கிராம சாவடி தெருவில் அரசு சித்த மருத்துவர் சிராஜூதீன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.
காமயகவுண்டபட்டியில் அரசு சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம் சார்பில், கூட்டுறவு சங்க வார விழாவை முன்னிட்டு, மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கும் நிகழ்ச்சியை, கூட்டுறவு சங்கத் தலைவர் ஜி. திருலோகசுந்தர் தொடக்கி வைத்தார். இதில், 1,400 பேர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
200 பேர்களுக்கு இ.சி.ஜி., எக்ஸ் ரே, ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மருத்துவர் முருகானந்தம் காய்ச்சல் விழிப்புணர்வு பற்றி பொதுமக்களிடையே பேசினார்.