தேனி ஊராட்சி ஒன்றியம், கோவிந்தநகரம் ஊராட்சியில் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு அரசு சார்பில் பசுமை வீடுகள் கட்டுவதற்கு மானியம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோவிந்தநகரத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்: கோவிந்தநகரத்தில் 300-க்கும் மேற்பட்ட அருந்தியர் குடும்பங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதில், பெரும்பாலானோருக்கு அதே ஊரில் சொந்தமாக வீட்டு மனையிடம் உள்ளது. இந்த வீட்டு மனையிடத்தில் அரசு சார்பில் பசுமை வீடுகள் கட்டித் தருவதற்கு மானியம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.
கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கொடுவிலார்பட்டியில் அருந்ததியர் சமுதாயத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை ஆக்கிரமித்து குப்பைகள் கொட்டி வைக்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.