தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி, மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியில் புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தைகள் நடமாட்டம் வனத்துறையினரின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உள்பட்ட மேகமலை வன உயிரின சரணாலய பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன், புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. புலிகளின் எச்சம், கால்தடம், கண்ணால் பார்ப்பது போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மேகமலை வன உயிரின சரணாலய வனப்பகுதியான சந்தனக்காவு, வெள்ளிமலை உள்ளிட்ட வருசநாடு வனப்பகுதிகளில் புலிகளின் கால் தடம், எச்சம் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, அப்பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. கடந்த 25 நாள்களில் வருசநாடு, மேகமலை, சந்தனக்காவு, வெள்ளிமலை வனப்பகுதிகளில் புலிகள், சிறுத்தைகள், கருஞ்சிறுத்தை போன்ற விலங்குகளின் நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.