தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் அவதிப்பட்டு வருகின்றனர்.
உத்தமபாளையத்தில் கடந்த ஒரு வாரமாக மின் விநியோகம் சீராக இல்லாமல், அடிக்கடி தடை ஏற்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 1 மணி நேரம் வரை மின்விநியோகம் தடைபடுகிறது. இதே நிலை இரவு நேரத்திலும் தொடர்வதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெறுவதால், பள்ளி மாணவர்கள் இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரிதும் பாதிக்கப்படுவதாக, பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே, உத்தமபாளையம் பகுதியில் சீராம மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.