தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
கம்பம் கோம்பை சாலை நாகக்கன்னியம்மன் கோயில் பகுதியில் கஞ்சா கடத்துவதாக கம்பம் வடக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் ஆய்வாளர் உலகநாதன், சிறப்பு சார்பு ஆய்வாளர் வி.கணேசன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் வந்து கொண்டிருந்த இளைஞரும், பெண்ணும் போலீஸாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
இதில் இளைஞரைப் பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர், கோம்பை சாலையைச் சேர்ந்த ரவி மகன் சேகர் (38) என்பதும், தப்பி ஓடிய பெண் கோம்பை சாலை தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்த தாயம்மாள் (38) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து சேகரை கைது செய்து, தாயம்மாளை தேடி வருகின்றனர்.