ஹைவேவிஸ் - மேகமலை வனப்பகுதியில் வழக்கத்தை விட மழைப்பொழிவு குறைந்து நீர் நிலைகள் வறண்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக ஹைவேவிஸ் மலைப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் ஆண்டிற்கு சராசரியாக 200 முதல் 250 மி.மீட்டர் அளவிற்கு மழைப்பொழிவு இருக்கும். ஹைவேவிஸ் மலைப் பிரதேசத்தில் ஆண்டுக்கு 8 மாதம் வரையில் மிதமான மழை பொழிவும், பருவமழை காலங்களில் கனமழையும் இருக்கும். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் மழைப்பொழிவின் அளவு ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் ஆண்டும் முழுவதும் நீர் வரத்து இருந்த வைகையாற்றில் தற்போது பல மாதங்களாக தண்ணீர் வறண்டு காணப்படுகிறது. அதே போல பக்தர்களால் புனித நீராக கருதும் சுருளித்தீர்த்த நீர் வீழ்ச்சியும் தண்ணீரின்றி காட்சியளிக்கிறது.
ஹைவேவிஸ் மலைப்பிரதேசத்தில் சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவர்ந்து இழுப்பது அங்குள்ள நீர் நிலைகளாகும். முக்கியமாக ஹைவேவிஸ் அணையில் தேங்கும் நீர் மணலார் மற்றும் மேல் மணலார் வரையில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரையில் நீண்ட மலைத்தொடர்களுக்கு மத்தியிலுள்ள பள்ளத்தாக்குகளில் தேங்கி நிற்கும். கண்ணுக்கு ஏட்டிய தூரம் வரையில் காட்சியளிக்கும் நீர் தேக்கமானது சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். ஆனால், சமீப காலமாக நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்புகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சமீப காலமாக பருவநிலை மாற்றம் காரணமாக மழை பொழிவு குறைந்து விட்டது. கேரள மாநிலத்திற்கு சொந்தமான வனப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவு இப்பகுதியில் இல்லை என்பது மிகவும் வேதனையான இருக்கிறது. இந்த மலைத்தொடரிலிருந்து ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி அழித்துவிட்டதாலே மழைப்பொழிவு குறைந்துவிட்டது என்கின்றனர்.