தகுதித்தேர்வை ரத்து செய்யக்கோரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை 8 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெக்ஸ்ட் எனும் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாள்களாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 8 ஆம் நாளான புதன்கிழமை மருத்துவமனை வளாகத்தின் உள்ளே புறநோயாளிகள் பிரிவு முன்பு அமர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு பயிற்சி மருத்துவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அகில இந்திய அளவில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மருத்துவ மாணவர்களும் "எக்ஸிட்' எனப்படும் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவராக பதிவு செய்ய முடியும் என்ற அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களை திரும்ப பெற வேண்டும்.
இந்த தகுதித் தேர்வு தேவையற்றது. இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஐந்து ஆண்டுகள் கஷ்டபட்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இதன்காரணமாக போலி மருத்துவர்கள் அதிகம் உருவாவதற்கு வழிவகுக்கும். மேலும் இதனால் பொதுமக்களுக்கான மருத்துவம் பாதிப்படையும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகுதித்தேர்வை ரத்து செய்யும் வரை மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.