சக்கம்பட்டி நந்தகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா
ஆண்டிபட்டி பேரூராட்சி சக்கம்பட்டி வைகை சாலை அண்ணா காலனியில் அமைந்துள்ள சத்யபாமா, ருக்மணி சமேத நந்த கோபால கிருஷ்ணர் கோயிலில் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை கிருஷ்ணருக்கு புனித கங்கை தீர்த்தத்தில் நீராடி திருமஞ்சனம் சாற்றி, பாசுரம் பாடி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உற்சவர் நந்தகோபால் பாமா, ருக்மணி சமேதரராய் ஊஞ்சலில் எழுந்தருளினர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. குழந்தைகள் கிருஷ்ணர், பாமா, ருக்மணி வேடமணிந்து கோயிலை வலம் வந்தனர். மாலை நந்தகோபாலகிருஷ்ணருக்கு திருப்பாவை பாடி மங்கள மேளம் முழங்க, வாண வேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை சண்முகசுந்தரம் மற்றும் முருகேசன் பூசாரி உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்திருந்தனர்.