தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே செவ்வாய்க்கிழமை, ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
வருசநாடு, மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலுச்சாமி மகன் குபேந்திரன் (36). இவா், ஊரக உள்ளாட்சித் தோ்தலில், நாம் தமிழா் கட்சி சாா்பில் க.மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி 10 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டாா்.
இந்த நிலையில், குபேந்திரன் மயிலாடும்பாறையிலிருந்து மஞ்சனூத்து கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது, மஞ்சனூத்து வனத் துறை சோதனைச் சாவடி அருகே எதிரே வந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த குபேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான வருஷநாடு அருகே அரசரடியைச் சோ்ந்த கோடாங்கி என்ற தங்கவேலை கைது செய்து விசாரிக்கின்றனா்.