காங்கிரஸ் நிர்வாகிகள் கொலை: காங்கிரஸ் நிர்வாகிகள் கொலை
தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் திடீர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் தமிழக எல்லை பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் காங்கிரஸ் கட்சி மாணவர் பிரிவைச் சேர்ந்த சரத்லால் (24), கிரிபேஷ் (22) ஆகிய இருவரையும், ஞாயிற்றுக்கிழமை மர்மக் கும்பல் வெட்டி கொலை செய்தது. இதையடுத்து கொலையாளிகளை கைது செய்யக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் காசர்கோடு பகுதி அளவில் பந்த் அறிவித்தனர்.
ஆனால் திங்கள்கிழமை அதிகாலையில் கேரள மாநிலம் முழுவதும் பந்த் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை வழக்கம் போல் இடுக்கி மாவட்ட பகுதிகளான, குமுளி, வண்டிப்பெரியார், கட்டப்பனை, பீர்மேடு, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் கடைகள் திறக்கப்பட்டன. அனைத்து வாகனங்களும் ஓடின. ஆனால் 10 மணிக்கு மேல், காங்கிரஸார் கூட்டமாக வந்து, மறியல் செய்து கடைகளை அடைக்க வலியுறுத்தினர். திடீரென்று ஏற்பட்ட பதற்ற நிலையால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் தமிழக குமுளி போலீஸார், தமிழக எல்லை லோயர்கேம்ப் பகுதியிலேயே பேருந்துகளை நிறுத்தி விட்டனர். இதே போல் கம்பம்மெட்டு வழியாக கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் இயக்கப்படவில்லை. திடீர் வேலை நிறுத்தத்தால், கேரளா செல்லும் கூலித் தொழிலாளர்கள், வியாபாரிகள் திங்கள்கிழமை பெரிதும் பாதிக்கப்பட்டனர்.