போடி வனப்பகுதியில் புதன் கிழமை இரவு முதல் எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
போடி குரங்கனியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து வனப்பகுதியில் அவ்வப்போது பிடிக்கும் தீயை கண்டறிய இந்திய வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வனப்பகுதியில் தீப்பிடிக்கும் நேரங்களில் உடனுக்குடன் வனத்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.
போடி வனப்பகுதிக்குப்பட்ட மரக்காமலை வனப்பகுதியில் புதன் கிழமை காட்டுத் தீ பிடித்தது.
தற்போது வெயில் அதிகமாக இருந்து வருவதாலும், இலையுதிர் காலமாக இருப்பதாலும் தீ வேகமாக பரவி வருகிறது. இப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு தீ எரிந்தது. இதனையடுத்து போடி மற்றும் தேனி வனத்துறையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தீ எரிந்து வருவதால் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. இதேபோல் போடி சூலப்புரம் பகுதிக்கு மேற்கு திசையிலும் வனப்பகுதியில் தீ பிடித்தது. இப்பகுதிக்கு விரைந்து சென்ற கோம்பை வனத்துறையினர் தீயை போராடி அணைத்தனர்.