உத்தமபாளையத்தில் கல் குவாரி குட்டை நீரில் மூழ்கி இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
உத்தமபாளையம் தாமஸ் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜன் மகன் ஹரீஸ் (12). இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் வேளாங்கண்ணி (26). இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் இருந்து வெளியே சென்றனர். ஆனால், நீண்டநேரம் ஆகியும் மீண்டும் திரும்பி வரவில்லையாம். அதையடுத்து அவர்களது உறவினர்கள் இருவரையும் தேடினர். இந்நிலையில், தாமஸ் காலனியை அடுத்துள்ள பயன்பாட்டில் இல்லாத கல் குவாரியில் குட்டை அருகே ஹரீஸ், வேளாங்கண்ணி ஆகியோரின் காலணிகள் கிடந்தன. இதனால் அவர்கள் இருவரும் கல்குவாரி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதுகுறித்து, உத்தமபாளையம் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் அங்கு வந்து கல் குவாரி குட்டையில் இறங்கி தேடினர். அப்போது ஹரீஸ்,வேளாங்கண்ணி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.