உத்தமபாளையத்தை அடுத்த கோம்பை பேரூராட்சிக்கு சொந்தமான வாரணாசி குளத்தில் உள்ள தென்னை, புளியமரங்களை அனுமதியின்றி அறுவடை செய்த நபருக்கே ஏலம் விட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோம்பை பேரூராட்சிக்கு உள்பட்ட வாரணாசி குளம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையின்பேரில், குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில் உத்தமபாளையம் வட்டாட்சியர், கோம்பை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் கடந்த மாதம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அதன்படி, ஆக்கிரமிப்பு செய்த இடத்திலிருந்த 130 புளியமரங்கள், 25 தென்னை மரங்களை கையகப்படுத்திய பேரூராட்சி நிர்வாகம் 2.50 ஏக்கர் ஆக்கிரமிப்பு குளத்தையும் மீட்டது. இந்நிலையில் வாரணாசி குளத்தில் உள்ள புளிய மரங்களில் புதுப்பட்டியைச் சேர்ந்த 12 பேர், 15 மூட்டை புளிகளை திங்கள்கிழமை அறுவடை செய்தனர். இதுகுறித்து பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற பேரூராட்சி ஊழியர்கள் புளிமூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் செவ்வாய்க்கிழமை உத்தமபாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் அனுமதியின்றி பறித்த 150-க்கு மேற்பட்ட தென்னை காய்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கோம்பை பேரூராட்சி செயல் அலுவலரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அப்போது, புளியமரங்களில் அறுவடை செய்வதவரே ஏலம் எடுக்க முன்வந்ததால், அவற்றை ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் விட்டதாகவும், மேலும் கோம்பை போலீஸாரிடம் பேரூராட்சி சார்பில் புகார் கொடுத்திருப்பதாகவும் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "பொது அறிவிப்பு மூலமாக ஏலம் விடாத சூழ்நிலையில், அனுமதியின்றி சட்ட விரோதமாக அறுவடை செய்தவரிடமே புளியமரத்துக்கான ஏலத்தொகையை பெற்றுக் கொண்டு ஏலம் விடப்பட்டதாக செயல் அலுவலர் கூறியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' என்றனர்.