தேனி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களில் 84 காவல் சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிப்பதற்கு 12 பறக்கும் படை மற்றும் 12 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வட்டாட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை குழுவில் காவல் துறை சார்பில் தலா ஒரு காவல் சார்பு ஆய்வாளர், தலா ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 2 காவலர்களும், நிலை கண்காணிப்புக் குழுவில் தலா ஒரு காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர், தலா ஒரு பெண் காவலர் உள்பட 3 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வருவாய்த் துறை சார்பில் தேர்தல் பறக்கும் படையில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் இருப்பர் என்று காவலர் துறை தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.