தேர்தல் விதிமீறல்: அதிமுக, கூட்டணி கட்சியினர் மீது வழக்கு
ஆண்டிபட்டியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் செவ்வாய்க்கிழமை மாலை ஆண்டிபட்டிக்கு வந்தார். அவருக்கு ஆண்டிபட்டி போலீஸ் சோதனைச் சாவடி அருகே அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அதிக வாகனங்களில் வந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனுமதி இன்றி கூட்டம் கூடுதல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சாலையில் பட்டாசு வெடித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வேட்பாளர் லோகிராஜன் உள்பட அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மீது தேர்தல் கண்காணிப்பாளர் உதயகுமார் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்த விசாரணை செய்து வருகின்றனர்.