ஆண்டிபட்டியில் காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.30 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 3 குழுக்களாகப் பிரிந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி போலீஸ் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கலைச்செல்வன், காவல்துறை சார்பு ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையில் இருந்து தேனி நோக்கிச் சென்ற காரை மறித்து சோதனையிட்டனர். காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2.30 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது.
பணத்தை கொண்டு சென்றவரிடம் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் பூம்பாறையைச் சேர்ந்த செந்தூர் செல்வம் (53) எனவும் கனடா நாட்டில் வேலை செய்துவிட்டு, விமானத்தில் மதுரை வந்து சொந்த ஊருக்கு செல்வதாகவும் தெரிய வந்தது. மேலும் வீடு கட்டுவதற்காக பணத்தை கொண்டு செல்வதாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளும்படி அதிகாரிகள் கூறிவிட்டு, கைப்பற்றிய பணத்தை ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.