போடியில் சனிக்கிழமை குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
போடி சோலை சொக்கலிங்கம் நகரை சேர்ந்தவர் பிரியங்கா (30). இவருக்கும் பல்லவராஜன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதில் ஒரு வயதில் தர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. பிரியங்காவின் கணவர் பல்லவராஜன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இருவரும் சிங்கப்பூரில் சிறிது காலம் வசித்த போது இருவருக்குள்ளும் குடும்பப் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஓராண்டாக பிரியங்கா கணவரை பிரிந்து போடியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதில் பிரியங்காவிடம் விவாகரத்துக் கோரி பல்லவராஜனும், பல்லவராஜனுடன் சேர்ந்து வாழக்கோரி பிரியங்காவும் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த பிரியங்கா தனது குழந்தையுடன் போடி சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சனிக்கிழமை வந்தார். அங்கே மயங்கி விழுந்த பிரியங்காவையும், குழந்தையையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதில் குழந்தை தர்ஷிகா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரியங்கா உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீஸாரின் விசாரணையில் குழந்தைக்கு விஷம் கொடுத்து பிரியங்காவும் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து போடி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.