தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால் தமிழ்புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் வனத்துறையினர் அமைத்த "ஷவர்' குழாயில் குளித்தனர்.
கம்பம் அருகே சுருளி அருவியில் சித்திரை முதல் நாளான தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் பொதுமக்கள் அதிகாலையிலே நீராடி செல்வார்கள். இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே சுருளி அருவிக்கு வந்த பக்தர்களுக்கு அருவியில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். மேகமலை வன உயிரின சரணாலயத்தினர் பக்தர்கள் குளிக்க மோட்டார் கிணறு மூலம் "ஷவர்' குழாய்கள் அமைத்து குளிக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதன் மூலம், ஆண், பெண் பக்தர்கள் குளித்து சுருளி வேலப்பர், பூதநாராயணசாமி கோயில்களில் வழிபாடு செய்தனர். கம்பத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.