ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் கங்கணம் கட்டி விரதம் இருந்தனர். வைகை ஆற்றில் இருந்து அம்மன் கரகம் எடுத்து வரப்பட்டு, சுவாமி பூப்பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். விழாவில் பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் ஒருபகுதியாக நடத்தப்பட்ட பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கையில் குழந்தை மற்றும் தீச்சட்டியை தூக்கியபடி பூக்குழி இறங்கினர்.