ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநரையும் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள கோவில்பட்டி கண்மாயிலிருந்து சட்டவிரோதமாக மணல் எடுத்து செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அதன்பேரில், கா.விலக்கு போலீஸார் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கரட்டுப்பட்டி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. அதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநரான கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமியை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, டிராக்டர் உரிமையாளரான கரட்டுப்பட்டியைச் சேர்ந்த குபேந்திரன் என்பவரை தேடி வருகின்றனர்.