தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இரு சனிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதியதில் உயிரிழந்தவர் குறித்த விவரத்தை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கண்டறிந்தனர்.
தனியார் பேருந்து ஒன்று, கம்பத்திலிருந்து தேனி நோக்கி க.புதுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கோசேந்திர ஓடை அருகே எதிரே வந்த 2 இரு சக்கர வாகனங்கள் மீது நேருக்கு நேராக மோதியது. இதில், பேருந்து திடீரென பிரேக் பிடித்து நின்றதால், பேருந்து பணியாளரான தேனி மாவட்டம் தேக்கம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் விஜயன் (23) என்பவர், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே சென்று சாலையில் விழுந்து, அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியரில், கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மனைவி மற்றும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனூர் கண்மாய் மேலத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கதிர்வேல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில், தம்பதியரின் முழு விவரம் தெரியாத நிலையில், இரு சக்கர வாகனப் பதிவு எண்ணை வைத்து போலீஸார் விசாரித்தனர். அதன்மூலம், இறந்தவர் கம்பம் அருகே சுருளிப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த சிவனாண்டி (45) எனவும், காயமடைந்த அவரது மனைவி ரேகா (34) எனவும் தெரியவந்தது. இது குறித்து உத்தமபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.