தேனி மாவட்டம், சின்னமனூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த இளைஞரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சின்னமனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்துவரும் 17 வயது மாணவி, பள்ளி முடிந்து வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால், குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், பெற்றோர் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சின்னமனூர் காந்தி நகர் காலனியை சேர்ந்த முருகேசன் மகன் ரஞ்சித்குமார் (23),
கடந்த ஓராண்டாக இந்த மாணவியை காதலித்து வந்ததாகவும், திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை மதுரைக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார், ரஞ்சித்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.