தேனியில் சமூக நலம், சத்துணவுத் திட்டத் துறை ஆகியவற்றின் சார்பில் வியாழக்கிழமை உணவுத் திருவிழா மற்றும் சத்துணவு சமையலர்களுக்கு சமையல் போட்டி நடைபெற்றது.
தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உணவுத் திருவிழா மற்றும் சமையல் போட்டியில் நகரம், ஊராட்சி ஒன்றியம் வாரியாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 26 சத்துணவு சமையலர்கள் பங்கேற்றனர். இதில், 7 வகையான சத்துணவுகளை தயார் செய்து காட்சிக்கு வைத்திருந்தனர்.
உணவுத் திருவிழா மற்றும் சமையல் போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகாதேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஹெலன் ரோஸி, உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) சுப்புராம் ஆகியோர் பார்வையிட்டு, சிறந்த சத்துணவு சமையலர்களை தேர்வு செய்தனர்.
சமையல் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த சத்துணவு சமையலர், உதவியாளர் மற்றும் கணக்கு பதிவேடு பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்ட சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஆக.15-ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தலா ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) கூறினார்.