கடமலைக்குண்டு, வைகை அணை பகுதிகளில் வாகனச் சோதனை என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் போலீஸார் பணம் வசூலித்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உள்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய கிராமங்களில் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடமலைக்குண்டு அருகே உள்ள கொம்புக்காரன்புலியூர் கிராமத்தில் செயல்படும் வனத்துறை சோதனைச் சாவடியில் தினமும் மாலை நேரத்தில் கடமலைக்குண்டு போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனராம். இந்த சோதனையின் போது பெயரளவில் சில வழக்குகள் மட்டும் பதிவு செய்துவிட்டு, மற்றவர்களிடம் பணம் வசூலிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக மதுஅருந்திவிட்டு வருபவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு அனுப்பிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் பொதுமக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். இதேபோல வைகை அணை பகுதியிலும் வாகன சோதனை என்ற பெயரில் போலீஸார் தீவிர வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
எனவே சுற்றுலாத் தலமான வைகை அணை மற்றும் கடமலைக்குண்டு பகுதிகளில் தவறு செய்யும் வாகன ஓட்டிகளிடம் முறையான நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கிராமப்புறங்களில் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் மற்றும் சாலை விதிகள் குறித்து போலீஸார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.