தேனியில் சாலையை கடந்து செல்ல முயன்ற மூதாட்டி திங்கள்கிழமை, வேன் மோதியதில் உயிரிழந்தார்.
பெரியகுளம், பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னையா மனைவி மாரியம்மாள்(77). இவர், தேனியில் உள்ள தனியார் ஆலையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், தேனி-பெரியகுளம் சாலை, என்.ஜி.ஓ., காலனி அருகே மாரியம்மாள் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அவ்வழியாக கோட்டூர் அருகே தர்மாபுரியைச் சேர்ந்த பெருமாள்(28) என்பவர் ஓட்டி வந்த வேன், மாரியம்மாள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநர் பெருமாளை கைது செய்து விசாரிக்கின்றனர்.