மேகமலை வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேகமலை வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்தது.
இதனையடுத்து வனப்பகுதிக்கு அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையும் மீறி அவ்வப்போது விலங்குகள் வேட்டையாடப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் மேகமலை வனப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் வேட்டை நாய்களுடன் செல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மேகமலை வனத்துறையினர் மண்ணூத்து வனப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சிலர் சமைத்து கொண்டிருப்பதை பார்த்த வனத்துறையினர் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். வனத்துறையினரைக் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர். அதில் 2 பேரை வனத்துறையினர் பிடித்தனர். வனத்துறையினர் அங்கு நடத்திய சோதனையில் அவர்கள் மான் வேட்டையாடி சமைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மானை வேட்டையாடியதாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் மண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார்(40), முருகன் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறையினர் மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.