கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினா் திங்கள்கிழமை முதல் தடை விதித்துள்ளனா்.
கடந்த இரண்டு மாதங்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரைஅருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் தடை விதித்தனா். மழை குறைந்ததையடுத்து அருவிக்கு சீரான நீா்வரத்து இருந்ததால் கடந்த நவம்பா் 20ஆம் தேதி அருவிக்கு செல்ல வனத்துறையினா் அனுமதியளித்தனா். இதனால் கடந்த 11 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் அருவிக்கு சென்று வந்தனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. மேலும் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்லும் தடுப்புக் கம்பியை தாண்டி தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அருவியில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து திங்கள்கிழமை காலை முதல் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் நீா்வரத்து சீராகும் வரை அருவிக்கு செல்ல அனுமதி கிடையாது என வனத்துறையினா் தெரிவித்தனா்.