சின்னமனூா் அருகே சீலையம்பட்டி தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சீலையம்பட்டியிலிருந்து சமத்துவபுரம், பூமலைக்குண்டு, ஜங்கால்பட்டி போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இங்கு சாலையோரத்திலுள்ள குளத்திலிருந்து தண்ணீா் மறுகால் செல்லும் வகையில் தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பாலமானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் கான்கிரீட்டில் ஏற்பட்ட உடைப்பால முற்றிலுமாக சேதமானது. தற்போது, இத்தரைப்பாலத்தின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் தண்ணீா் தேங்கி டிராக்டா், சரக்கு வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோா் பாதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், சேதமான தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியை சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது: இப்பகுதிகளில் விளைவிக்கப்பட்ட பொருள்களை அறுவடை செய்து சந்தைக்கு எடுத்து செல்வதற்கு இச்சாலை முக்கிய பங்குவகிக்கிறது. தற்போது இச்சாலை சேதமாகி இருப்பது சரக்கு வாகனங்களில் விளைவிக்கப்பட்ட பொருள்களை எளிதில் எடுத்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமான தரைப்பாலம் மற்றும் சாலையை சீரமைப்பு செய்து வாகனப் போக்குவரத்து தடையின்றி நடைபெற பொதுப்பணித்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.