தேனி மாவட்டம் ஹைவேவிஸ்- மேகமலை நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை 2 ஆவது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சதுடனே சென்று வருகின்றனா்.
கடந்த வாரம் பெய்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் 18 கொண்டை ஊசி வளைவு பகுதிகள், அடுக்கம்பாறை, மாதா கோயில் என பல இடங்களில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் பெரிய அளவிலான மரங்கள் வேறோடு சாய்ந்து நெடுஞ்சாலையில் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சாலைப்பணிகள் சீரமைப்பு: உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலமாக சாலைகளை சீரமைப்பு செய்தனா். அதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை மாலையில் வழக்கம் போல வாகனப் போக்குவரத்து நடைபெற வனத்துறையினா் அனுமதி அளித்தனா். வனப்பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. எனவே நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சதுடனே சென்று வருகின்றனா்.
ஒட்டன்சத்திரம்: தொடா் மழையின் காரணமாக ஒட்டன்சத்திரம்- பாச்சலூா் சாலையில் திங்கள்கிழமை மண்சரிவு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில், கடந்த சில தினங்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாச்சலூா் மலைப்பகுதியில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாச்சலூா் செல்லும் மலைச்சாலையில் முதல் கொண்டை ஊசி வளைவுப்பகுதி அருகே திங்கள்கிழமை அதிகாலை மண்சரிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று மண்ணை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனா்.