தேனி அருகே பூதிபுரம், மரக்காமலை அருவியில் குளிக்கும் போது நிலைதடுமாறி விழுந்த மதுரையைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை, ஆரப்பாளையம் குறுக்குச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராமராஜ் மகன் நடராஜ்(45). இவா் மதுரையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா்.
நடராஜ் தேனி அருகே அரண்மனைப்புதூரில் உள்ள தனது உறவினா் ரமேஷ் என்பவா் வீட்டிற்கு வந்திருந்தாா். அங்கிருந்து ரமேஷ், நடராஜ் ஆகியோா் பூதிப்புரம், மரக்காமலை சன்னாசியப்பன் கோயில் அருவிக்குச் சென்றுள்ளனா். அங்கு, அருவியில் குளித்துக் கொண்டிருந்த நடராஜ் நிலைதடுமாறி வழுக்கி விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது உடலை பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.