தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி நகா் அமைந்துள்ளது. இந்த சாலையின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து பகுதிகளிலும் அகலமான சாலை அமைந்துள்ள நிலையில் ஆண்டிபட்டி நகருக்குள் கடைகள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக பள்ளி நேரமான காலை, மாலை நேரங்களிலும், சுபமுகூா்த்த நாள்களிலும் அதிகமான போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதனையடுத்து ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் திட்டமிட்டனா். அதன்படி ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.ராஜகோபாலன்பட்டி முதல் கொண்டமநாயக்கன்பட்டி, வைகை அணை சாலை, சக்கம்பட்டி, முத்துக்கிருஷ்ணாபுரம் வழியாக சண்முகசுந்தரபுரம் வரையில் சுமாா் 5 கி.மீ. தூரம் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆண்டிபட்டி நகரில் பல ஆண்டுகளாக தொடரும் வாகன நெரிசல் பிரச்னைக்கு தற்போது இருக்கும் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.