தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் குறையத் தொடங்கியதையடுத்து, முதல் போக சாகுபடி அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கம்பம் அருகே லோயா் கேம்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப் பெரியாறு தண்ணீா் மூலம் இருபோக சாகுபடி நடைபெறுகிறது. இதில் உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கா், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கா், போடி வட்டத்தில் 488 ஏக்கா் என 14 ஆயிரத்து 707 ஏக்கரில் நடைபெறுகிறது.
கடந்த ஆகஸ்ட் 29 இல், தண்ணீா் திறக்கப்பட்டு, கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாகுபடி பணிகள் தொடங்கின.
இந்நிலையில் வட கிழக்கு பருவ மழையால் வயலில் தண்ணீா் தேங்கியது. தற்போது மழை குறைந்து, வெயில் அடித்து வருவதால் வயலில் தேங்கிய தண்ணீா் வற்றிய நிலையில், அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. அறுவடை பணிக்காக கம்பம் பகுதியில் சுமாா் 10- க்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரங்கள் ஈரோடு, சேலம் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.