உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர்- ஞானாம்பிகை கோயிலில் ராகு கேது பெயர்ச்சி விழாவையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயில் ராகு கேது பரிகார ஸ்தலமாகும்.
ராகு கேது பெயர்ச்சி விழா: இக்கோயில் நிர்வாகம் சார்பில் ராகு கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, முதல் நாள் செவ்வாய்க்கிழமை (பிப்.12) மாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராகு கேது காயத்ரி ஹோமம் , சர்ப்ப சாந்தி ஹோமம் நடைபெற்றன. புதன்கிழமை காலையிலிருந்து, விசேஷ ஹோமம், 12 ராசிக்குரிய தோஷ பரிகார ஹோமம் பெயர்ச்சி அபிஷேக அலங்கார பூஜைகள் அர்ச்சனைகள் நடைபெற்றன.
அதன் பின்னர், ராகு கடகத்திலிருந்து மிதுனத்துக்கும், கேது, மகரத்திலிருந்து தனுசுக்கும் பிற்பகல் 2.02 மணியளவில் பெயர்ச்சியான பின்னர், பிற்பகல் 2.45 மணி அளவில் கும்பத்தில் காட்சியளித்த ஸ்ரீராகு - கேது பகவானுக்கு நடந்த திருக்கல்யாணத்தை கோயில் குருக்கள் நீலகண்டன் நடத்தி வைத்தார்.