பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை கார்த்திகை தினத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அடிவாரம் கிரிவீதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் மலைக்கோயிலுக்கு படிவழிப்பாதையில் ஏராளமான பக்தர்கள் சென்றனர். மலைக்கோயிலில் அதிகாலை நான்கு மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு தமிழ் மாதப்பிறப்பு பூஜை, விஸ்வரூப தரிசனம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. "வின்ச்' மற்றும் ரோப்கார் நிலையங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
மலைக் கோயிலில் கட்டண தரிசன வரிசை மற்றும் இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தவிர அன்னதானத்துக்கான காத்திருப்பு கூடத்திலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் மலையில் தங்கியிருந்து ராஜஅலங்காரம் மற்றும் தங்கரதத்தில் சின்னக்குமாரசாமி புறப்பாட்டை பார்த்த பின்னரே கீழிறங்கினர்.