தேனியில் விஸ்வாசம் திரைப்பட சுவரொட்டியை அவமதிப்பு செய்ததாக கணவன், மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த அஜீத் ரசிகர்கள் 9 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
நடிகர் அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தேனியில் அஜீத் ரசிகர்கள் சிலர் இப்படத்தின் சுவரொட்டியை பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர்.
தேனி பாரஸ்ட் சாலை பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் சின்னன் மகன் ஜெயமணி என்பவரது வீட்டுக்குச் சென்ற அஜீத் ரசிகர்கள் சிலர், அவரையும், அவரது மனைவியையும் தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் ஜெயமணி புகார் அளித்தார். அதன்பேரில், தேனி பாரஸ்ட் சாலையைச் சேர்ந்த விக்னேஷ்வரன், முருகன் மகன் பாலமுருகன்(22), செந்தில்குமார் மகன் அஜீத்குமார் (20), ஜெகதீசன் மகன் சதீஸ்வரன் (22) உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து, 9 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விக்னேஷ்வரனை தேடி வருகின்றனர்.