பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயிலில் பாவை நோன்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் சுவாமியை திருப்பாவை பாடி வழிபடுவர். இதில் மார்கழி 27 அன்று பெண்கள் புத்தாடை உடுத்தி பெருமாளை வழிபடுபவர். அவ்வாறு வழிபடும் பாவை நோன்பு நிகழ்ச்சி தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் என்.செல்வி தலைமை வகித்தார். முருகேஸ்வரி, சித்ரா மற்றும் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிகாலை 5 மணியளவில் தாமரைக்குளம் நகரில் திருப்பாவை பாடல்களை பாடி வலம் வந்தனர்.
அதன் பின் கோயிலில் பாவை நோன்பு இருக்கும் பெண்கள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் கிருஷ்ணர் மற்றும் ஆண்டாள் வேடமிட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருப்பாவை பாடல்கள் போட்டியில் வெற்றி பெற்ற சிறுமி மற்றும் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெங்கடாஜலபதி கோயில் நிர்வாக பராமரிப்பு குழுவினர் செய்திருந்தனர்.